திருப்பதியில் ஸ்ரீவாணி தரிசனம் நேரம் மாற்றம்

ஆன்லைனில் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வழக்கம் போல் காலை 10 மணிக்கு தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் ஸ்ரீவாணி தரிசனம் நேரம் மாற்றம்
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் அனைத்து நாட்களும் கூட்டம் அலைமோதுகிறது. இந்தநிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலய நிர்மாணம் அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்ட, ஆப்லைன் டிக்கெட்டுகளைப் பெறும் பக்தர்களுக்கான பிரேக் தரிசன நேரத்தில் மாற்றத்தை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 15, 2025 வரை சோதனை அடிப்படையில் கொண்டு வரப்படும் இந்த மாற்றம், பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்ய உதவும்.

தற்போது, இந்த டிக்கெட்டுகளை வாங்கிய பிறகும், பக்தர்கள் பெரும்பாலும் இரண்டு நாட்கள் வரை தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த புதிய நடைமுறையின்படி, ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் இப்போது தினமும் காலை 10 மணிக்கு திருமலையில் உள்ள ஒரு பிரத்யேக மையத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும். டிக்கெட்டுகளைப் பெறும் பக்தர்கள், அதே நாளில் மாலை 4:30 மணிக்குள் வைகுண்டம் வரிசை வளாகம்-1 இல் பிரேக் தரிசனத்திற்காக பதிவு செய்து வரிசையில் நிற்க வேண்டும்.

ஏற்கனவே உள்ளது போல 800 ஆப்லைன் ஸ்ரீவாணி டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு தொடரும். இருப்பினும், ரேணிகுண்டா விமான நிலையத்தில் தினமும் காலை 7 மணி முதல், அன்றைய ஒதுக்கீடு தீரும் வரை 200 ஸ்ரீவானி டிக்கெட்டுகள் தனி ஒதுக்கீடு செய்யப்படும். ஆப்லைன் மூலம் வருபவர்களுக்கு அணுகலை எளிதாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இதன் விளைவாக திருமலையில் தங்குவதற்கான தேவை குறையும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

ஸ்ரீவானி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்ட பிரேக் தரிசன முறை அக்டோபர் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடை அளிப்பதன் மூலம் பக்தர்கள் ஒரு முறை விஐபி பிரேக் தரிசனத்தைப் பெற இது அனுமதிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com