

மும்பை,
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய போது அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரியாவின் சகோதரர் சோவிக் சக்கரபோர்த்தி, சுஷாந்த்சிங்கின் உதவியாளர் சாமுவேல் மிரண்டா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து உள்ளனர்.
இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி முத்தா அசோக் ஜெயின் கூறுகையில், இந்த வழக்கு எங்களுக்கு போதை பொருள் ஊடுருவல், நெட்வொர்க் பற்றிய தகவலை கொடுத்து இருக்கிறது. சோவிக், மிரண்டாவை காவலில் எடுத்ததே அவர்களை ஒருவரை பற்றி ஒருவர் கூறுவார்கள் என்பதற்காக தான். ரியா மற்றும் மேலும் சிலரையும் நாங்கள் விசாரணைக்கு அழைப்போம். யார், யார் என்ன செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது. சோவிக் மற்றும் ரியாவிடம் நேருக்கு நேர் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.