

புதுடெல்லி,
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி, கடந்த ஜூன் மாதம் சீனா செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த பயணத்தை ரத்து செய்த அவர், தன்னை சீனா செல்ல விடாமல் மத்திய அரசு தடுத்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.
மம்தாவின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அரசு, மாநிலங்களின் முதல்மந்திரிகளோ, மந்திரிகளோ சீனா செல்வதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என தெளிவுபடுத்தி உள்ளது. அத்துடன், பல மாநிலங்களின் முதல்மந்திரிகள் அடிக்கடி சீனாவுக்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளது.
அதன்படி சந்திரசேகர் ராவ் (தெலுங்கானா), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) ஆகியோர் அவ்வப்போது சீனா சென்று வருவதாக கூறியுள்ள மத்திய அரசு, மராட்டிய முதல்மந்திரி பட்னாவிஸ் (2015), அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார் (2016), சத்தீஷ்காரின் ராமன் சிங் (2016) போன்ற முதல்மந்திரிகளும் சமீபத்திய ஆண்டுகளில் சீனா சென்று வந்ததாக கூறியுள்ளது.
இதைப்போல தெலுங்கானா தொழில்துறை மந்திரி ஜுபள்ளி கிருஷ்ணராவ், எரிசக்தி துறை மந்திரி ஜெகதிஷ் ரெட்டி போன்ற மாநில மந்திரிகளும் அரசு முறை பயணமாக சீனா சென்று வந்திருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.