

வதோதரா,
குஜராத் மாநிலத்தில் உலகிலேயே மிகப் பெரிய அளவில் 'ஒற்றுமைக்கான சிலை' என்ற பெயரில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை நர்மதா மாவட்டத்தில் நிறுவப்பட உள்ளது. இதற்கான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சுமார் 182 மீட்டர் உயரத்துக்கு அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலைக்கு நிகராக அமைக்கப்பட உள்ள இந்த சிலைக்கு ரூ. 2,979 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் புகழைப் பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ஆம் தேதி ஒற்றுமையின் சிலையாக திறக்கப்பட உள்ளது. நர்மதை நதி பாயும் சர்தார் சரோவார் அணையிலிருந்து 3.32 கிலோ மீட்டர் தொலைவில் அமையவுள்ள இச்சிலை இரும்பு மனிதனின் 138-வது பிறந்த நாளான அக்டோபர் 31ந்தேதி திறக்கப்படும் என குஜராத் அரசின் முதன்மை செயலாளர் ஜெ என் சிங் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,சிலை உருவாகும் இடத்திற்கு சென்று நடைபெறும் வேலை முறைகளை கவனித்தேன்.குறித்த நேரத்தில் இரும்பு மனிதனின் சிலை வடிவமைக்கப்பட்டு ஒற்றுமையின் சிலையாக திறக்கப்படும். மேலும், இச்சிலையை நிறுவுவது பிரதமர் மோடியின் நீண்ட நாள் கனவாகும். சிலைக்கு அருகே படேலின் வாழ்க்கை வரலாறு,சாதனைகள் அடங்கிய தொகுப்புகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அருங்காட்சியகம் நிறுவும் திட்டமும் உள்ளது என்றார்.
வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்கும் திட்டப்பணிகள் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது. மோடி அடிக்கல் நாட்டி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.