சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு காதர் பாட்ஷா, சுப்ரீம் கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை ஐகோர்ட்டில் தான் முன்ஜாமீன் கோரிய மனு மீது காணொலி காட்சி மூலம் விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே தன்னை கைது செய்தது சட்ட விரோதம் என்றும், மேலும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, நீதிபதியின் வாய்மொழி உத்தரவை மீறி தன்னை கைது செய்தது கோர்ட்டு அவமதிப்பு என்றும், எனவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறி இருந்தார்.

இந்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டில் காதர் பாட்ஷாவின் முன்ஜாமீன் மனு மீது காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விசாரணை தொடர்பான பதிவுகளை தாக்கல் செய்யுமாறு, கடந்த மார்ச் 15-ந் தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில், காதர் பாட்ஷாவின் மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் குப்தா, சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும், ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரம், காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விசாரணை தொடர்பான எழுத்துபூர்வமான விவரங்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் 15-ந் தேதி பிறப்பித்த உத்தரவின் நகல் ஆகியவற்றை சென்னை ஐகோர்ட்டு பதிவாளர், மனுதாரர் காதர் பாட்ஷாவுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com