மாநில அரசுகளுடன் இணைந்து நீராதாரத்தை பெருக்க நடவடிக்கை - மத்திய மந்திரி கஜேந்திர சிங் அறிவிப்பு

நீராதாரத்தை பெருக்க மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக மத்திய ஜலசக்தி மந்திரி கஜேந்திர சிங் செகாவத் கூறினார்.
மாநில அரசுகளுடன் இணைந்து நீராதாரத்தை பெருக்க நடவடிக்கை - மத்திய மந்திரி கஜேந்திர சிங் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மாநிலங்களவையில் மத்திய ஜலசக்தி மந்திரி கஜேந்திரசிங் செகாவத் பேசிய தாவது:-

மத்திய அரசு 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. தீர்மானம் 2030-ம் ஆண்டை தான் காலநிர்ணயமாக அறிவித்து இருந்தது.

தண்ணீரை பாதுகாக்கும் இயக்கம் மக்கள் இயக்கமாக மாறும் வரை இதில் நாம் முன்னேற்றம் காணமுடியாது. நிதி ஆயோக்கின் புதிய இந்தியாவுக்கான வழிமுறைகள் பற்றிய அறிக்கைபடி, 2001-ம் ஆண்டு தனிநபருக்கு கிடைத்த 1.816 கனமீட்டர் தண்ணீர், 2011-ம் ஆண்டு 1.544 கனமீட்டராக குறைந்துவிட்டது.

நீராதாரம் மாநில விவகாரம் என்றாலும், மத்திய அரசு நீராதாரத்தை பெருக்க மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின்கீழ் ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை மேம்படுத்த தேவையான தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு வழங்க உள்ளது.

மாநில அரசுகள் தெரிவித்துள்ள தகவலின்படி மொத்தம் உள்ள 17.25 லட்சம் ஊரக குடியிருப்பு பகுதிகளில் 13.98 லட்சம் குடியிருப்பு பகுதிகளில் (81.02 சதவீதம்) பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 91.83 கோடி ஊரக மக்கள் தொகையில் 70 கோடி (76.25 சதவீதம்) மக்களுக்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான கட்டமைப்பு வசதி உள்ளது.

தேசிய ஊரக குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் நிதியில் 25 சதவீதத்தை குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பயன்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் ஆதாரங்களை பாதுகாக்க நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் அமைப்புகள், மழைநீர் சேமிப்பு அமைப்புகள் ஆகியவை மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய ஜலசக்தி மந்திரி கஜேந்திரசிங் செகாவத், தண்ணீர் பற்றாக்குறையான 256 மாவட்டங்களில் உள்ள 1,592 வட்டாரங்களில் ஜலசக்தி அபியான் என்ற தண்ணீர் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இதில் தண்ணீர் பாதுகாப்பு, மழைநீர் சேமிப்பு, நீர்நிலைகளை புதுப்பித்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், நீரோட்ட பாதைகளை மேம்படுத்துதல் ஆகிய 5 பணிகளுக்கு கவனம் செலுத்தப்பட உள்ளது. மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இணைந்து இந்த இயக்கத்தை நடத்துவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com