

கர்நாடகா,
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் தூத்துக்குடி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் நேற்று நடந்த சம்பவத்தில் போலீசார் மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்ததையடுத்து சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவரில் செல்வசேகர் என்பவர் இன்று உயிரிழந்து உள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.
தூத்துக்குடியில் கலவரம் பரவிடாமல் தடுப்பதற்காக 5 நாட்களுக்கு இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவத்தினை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற்றது. கர்நாடகாவில் ம.ஜ.த கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்ற விழாவில் பா.ஜ.க அல்லாத அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்திய அரசியலில் இந்த சம்பவம் ஒரு சிறப்பான நிகழ்வாகக் கருதப்பட்டது.
இந்நிலையில் குஜராத் எம்.எல்.ஏ ஜிகேஷ் மேவானி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ``குமாரசுவாமி பதவியேற்பு விழாவில் ஏதேச்சாதிகார பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். என அவர் பதிவிட்டுள்ளார்.