மெகுல் சோக்‌ஷியின் தரை, கடல், வான் வழியான நகர்வை தடுத்து கைது செய்யுங்கள் ஆன்டிகுவாவிற்கு இந்தியா கோரிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு தப்பிய மெகுல் சோக்‌ஷியை கைதுசெய்ய ஆன்டிகுவாவிற்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
மெகுல் சோக்‌ஷியின் தரை, கடல், வான் வழியான நகர்வை தடுத்து கைது செய்யுங்கள் ஆன்டிகுவாவிற்கு இந்தியா கோரிக்கை
Published on

புதுடெல்லி,

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக ரூ.13,400 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர். இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மெகுல் சோக்ஷி ஜூலை மாதம் கார்பியன் தேசமான ஆன்டிகுவாவிற்கு சென்று, உள்ளூர் பாஸ்போர்ட்டை பெற்றது தெரியவந்தது.

இதனையடுத்து அந்நாட்டு அதிகாரிகளை நாடியுள்ள சிபிஐ, மெகுல் சோக்ஷிக்கு எதிராக இன்டர்போல் வெளியிட்ட நோட்டீஸை குறிப்பிட்டு, அவர் எங்கிருக்கிறார், அவர்களுடைய நகர்வு என்னவாக இருக்கிறது என்பது தொடர்பான தகவலை அளியுங்கள் என கேட்டது. இந்நிலையில் ஆன்டிகுவா அரசு, மெகுல் சோக்ஷிக்கு குடியுரிமை வழங்கியதால் அந்நாட்டு எதிர்க்கட்சிகளிடம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. ஆன்டிகுவா நாட்டின் முதலீடு செய்யும் போது கிடைக்கும் சலுகையின் மூலம் விசாவை பெற்றுள்ளார் மெகுல் சோக்ஷி.

இதனையடுத்து வங்கி மோசடியில் மெகுல் சோக்ஷி மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது தெரிந்து இருந்தால் நாங்கள் குடியுரிமை வழங்கியிருக்க மாட்டோம் என ஆன்டிகுவா தெரிவித்தது. இப்போது அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி மெகுல் சோக்ஷியை கைது செய்யுமாறு ஆன்டிகுவா அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளை நேரில் சந்தித்து இது தொடர்பாக வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் தரை, கடல், வான் வழியான அவரது பயணங்களுக்கு தடை விதிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் மத்திய அரசு தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com