ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்துங்கள்: வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

துணை ஊழியர்களாக இந்திய நாட்டினரை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
புதுடெல்லி,
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
ரஷிய ராணுவத்தில் துணை ஊழியர்களாக இந்திய நாட்டினரை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையை ரஷியா நிறுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ரஷிய ராணுவத்தில் சேரும் வாய்ப்பை இந்திய இளைஞர்கள் ஏற்கக்கூடாது. ரஷிய ராணுவத்தில் சேர சலுகைகளை ஏற்க வேண்டாம். இது ஆபத்து நிறைந்ததாகும்.கடந்த ஒரு ஆண்டாக இந்திய அரசு இதன் ஆபத்துகளை பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கேற்ப இந்திய குடிமக்களை எச்சரித்துள்ளது. ரஷிய ராணுவத்தில் தற்போது சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் போன்ற துணை பணியாளர்களாகப் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும்.இந்த விஷயத்தை டெல்லி மற்றும் ரஷியாவில் உள்ள ரஷிய அதிகாரிகளிடமும் எடுத்து கூறி உள்ளோம். இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்து எங்கள் நாட்டினரை விடுவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களின் குடும்பத்தினருடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.






