

மும்பை,
அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்றுள்ள டவ்தே புயல், நாளை அதிகாலை குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த புயலால், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்துள்ளது. பெருமளவில் சேதங்களையும் ஏற்படுத்தி சென்றுள்ளது.
கேரளா முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர்.
கேரளா முழுவதும் இன்று வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் டவ்தே புயலால் இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 73 கிராமங்கள் பாதிப்படைந்து உள்ளன.
குஜராத்திலும் புயலை எதிர்கொள்ள, தாழ்வான பகுதிகள் மற்றும் கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அரசு மாற்றி வருகிறது.
இந்த புயலானது, கோவாவில் இருந்து மராட்டியம் வழியே குஜராத் சென்றடைகிறது. இந்நிலையில், புயலால் மராட்டியத்தின் ஜல்காவன் நகரில் அஞ்சல்வாடி பகுதியில் நேற்று குடிசை வீடு ஒன்றின் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், வீட்டில் இருந்த 17 மற்றும் 12 வயதுடைய 2 சகோதரிகள் பலியானார்கள்.
இந்த சம்பவத்தில் அவர்களின் தாயாருக்கு படுகாயங்கள் ஏற்பட்டன. அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். புயலை முன்னிட்டு தடுப்பூசி பணிகளை நிறுத்தி வைக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.
புயலை எதிர்கொள்ள, ராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவற்றை சேர்ந்த மீட்பு குழு மற்றும் நிவாரண குழுவினர், கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் தயார் நிலையில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று, தேசிய பேரிடர் மீட்பு படையின் 79 குழுக்கள் புயல் கடந்து செல்லும் மாநிலங்களில் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. அவசர தேவைக்காக கூடுதலாக 22 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.
புயல் கடந்து செல்லும்பொழுது, மராட்டியத்தின் மும்பை நகரில் சிவசேனா பவன் அருகே இருந்த மரங்களும் மற்றும் மின் கம்பம் ஒன்றும் அடியோடு சாய்ந்து விழுந்தன.
மும்பையின் ஜுகு பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வெள்ளநீர் தெருக்களில் தேங்கி காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலும் கனமழை மற்றும் பலத்த காற்று ஆகியவற்றால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. மராட்டியத்தின் மும்பை நகரில், அரபி கடல் கடும் சீற்றமுடன் காணப்படுகிறது. அலைகள் பல மீட்டர் உயரம் வரை கரையில் எழும்பி வீசி வருகிறது.
மும்பை விமான நிலையம் இன்று காலை 11 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மூடப்படும் என அறிவிப்பு வெளியானது. பின்னர் இந்த அறிவிப்பு மாலை 4 மணிவரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து புயல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் சூழலில் மாலை 6 மணிவரை
மும்பை விமான நிலையம் இன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.