ஆந்திராவில் வினோதம்: திருடிய வீட்டிலேயே சாப்பிட்டு 5 நாட்கள் தூங்கிய திருடன் கைது

கொல்லப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசராவ் வீட்டிற்கு போலீசார் வந்து பார்த்தபோது மதுபோதையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த திருடனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
திருப்பதி,
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பொப்பிலி அடுத்த கொல்லப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசராவ், விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். சீனிவாசராவ் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிக் கொண்டு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று விவசாய பணிகளை செய்வது வழக்கம். கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றனர்.
வீடு பூட்டப்பட்டு இருந்ததை அறிந்த பிடரி கிராமத்தைச் சேர்ந்த திருடன் ஒருவன் சீனிவாசராவின் வீட்டிற்கு சென்றார். வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் மற்ற பொருட்களை திருடிக் கொண்டு வெளியே செல்வார். திருடப்பட்ட பொருட்களை விற்றுவிட்டு அதில் கிடைக்கும் பணத்தில் மது அருந்துவார். பகல் முழுவதும் வெளியே சுற்றித் திரியும் திருடன், இரவு நேரங்களில் திருடப்பட்ட அதே வீட்டில் தங்கி இருந்தான். கடந்த 5 நாட்களாக இதே வேலையை செய்து வந்தான். நேற்று இரவு ஆட்கள் இல்லாத வீட்டில் இரவு நேரத்தில் விளக்கு எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
இதுகுறித்து சீனிவாசராவின் மகனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சீனிவாசராவ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மதுபோதையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த திருடனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட வீடுகளை நோட்டமிட்டு பொருட்களை திருடி சென்று மது குடித்துவிட்டு மீண்டும் அதே வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.






