கல்லூரி மாணவியை கடித்துக் குதறிய தெருநாய்கள்; முகத்தில் 17 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை

நாய்கள் கடித்ததில் வைஷ்ணவியின் முகத்தில் வலது கன்னத்தின் ஒரு பகுதி கிழிந்து தொங்கியது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஷியாம் நகர் பகுதியை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி வைஷ்ணவி சாகு. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 20-ந்தேதி கல்லூரி முடிந்து வைஷ்ணவி வழக்கம்போல் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த தெருநாய்கள் திடீரென வைஷ்ணவியை ஆக்ரோஷமாக விரட்டி கடித்துக் குதறின. இதில் வைஷ்ணவி நிலை தடுமாறி கீழே விழுந்தார். நாய்கள் கடித்ததில் அவரது முகத்தில் வலது கன்னத்தின் ஒரு பகுதி கிழிந்து தொங்கியது. மேலும் மூக்கு, கை உள்பட பல இடங்களிலும் நாய்கள் கடித்தில் படுகாயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், நாய்களிடம் இருந்து வைஷ்ணவியை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் வைஷ்ணவியின் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரது முகத்தில் சுமார் 17 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சமீப காலமாக நாய்க்கடி விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ள சூழலில், கல்லூரி மாணவியை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






