தெரு நாய்கள் தொடர்பான வழக்கு; தமிழக தலைமை செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜர்

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
புதுடெல்லி,
தெரு நாய் தொல்லை விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணக்க அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் டெல்லி மாநில அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தன.
பின்னர் இந்த வழக்கு கடந்த 27-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் கோர்ட்டில் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர்கள் காணொலி மூலம் ஆஜராக அனுமதி கேட்டதையும் கடந்த 31-ந் தேதி நீதிபதிகள் நிராகரித்தனர்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இந்நிலையில், தெரு நாய்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று நேரில் ஆஜராகி உள்ளார். அவர் ஆவணங்களுடன் கோர்ட்டுக்கு சென்றுள்ளார்.






