தெருநாய் கடி தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியவரை கடித்த தெருநாய்

நிகழ்ச்சியின்போது தெருநாய் கடி தொடர்பாக ராதாகிருஷ்ணன் நடித்துக்கொண்டிருந்தார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் கன்னூர் மாவட்டம் மயில் கிராமத்தை சேர்ந்த நாடக கலைஞர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை அக்கிராமத்தின் தெருநாய் கடி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். தெருநாய் கடியில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது, தெருநாய் கடித்தால் என்ன செய்தவது என்பது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது தெருநாய் கடி தொடர்பாக ராதாகிருஷ்ணன் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த தெருநாய் ராதாகிருஷ்ணனை திடீரென கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் தெருநாயை விரட்டினார். ஆனால், இதுவும் விழிப்புணர்வு நாடகத்தின் ஒரு பகுதி என நினைத்த கிராமத்தினர் தெருநாயை விரட்டாலம் நாடகத்தை கண்டு ரசித்தனர்.
அதேவேளை, தெருநாயை விரட்டிவிட்ட ராதாகிருஷ்ணன் 10 நிமிடங்களுக்குமேல் நாடகத்தை தொடர்ந்தார். பின்னர், நாடகம் முடிந்தபின்னர் உண்மையிலேயே தெருநாய் தன்னை கடித்து விட்டதாக கிராம மக்களிடம் கூறினார். இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற ராதாகிருஷ்ணன் அங்கு தெருநாய் கடிக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். ராதாகிருஷ்ணன் தற்போது நலமுடன் உள்ளார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.






