சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தி, ஜனநாயக மாண்புகளை பாதுகாக்க வேண்டும்: கார்கே புத்தாண்டு வாழ்த்து

நம் அனைவருக்கும் சிறந்த தரம் வாய்ந்த வாழ்வு கிடைக்க பெற வேண்டும் என கார்கே தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் ஆங்கில புது வருட கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இந்தியாவில் காலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு சென்று இறைவழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். புது வருட பிறப்பையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், உங்கள் அனைவருக்கும், மகிழ்ச்சியான இந்த புது வருடத்தில் எனது இனிய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வேலை செய்வதற்கான உரிமை, வாக்களிப்பதற்கான உரிமை மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமை என இந்த ஆண்டை, ஆபத்தில் இருக்க கூடியவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு பெரிய இயக்கமாக மாற்றுவோம்.
நம்முடைய அரசியலமைப்பையும், ஜனநாயக மாண்புகளையும் பாதுகாப்போம். குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்போம். சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
நம்முடைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகளின் வளம், விளிம்புநிலையில் உள்ளவர்களை கண்ணியத்துடன் நடத்துவது மற்றும் நம் அனைவருக்கும் சிறந்த தரம் வாய்ந்த வாழ்வு கிடைக்க பெற வேண்டும். இதுவே நம்முடைய பகிரப்பட்ட தீர்மானம் என கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு மகிழ்ச்சியையும், வளம் மற்றும் வளர்ச்சியையும் உங்கள் அனைவருக்கும் கொண்டு வரட்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.






