பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாட்டம்
Published on

புதுடெல்லி,

ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ந்தேதி புறப்பட்டனர். விண்ணில் ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த டிராகன் விண்கலம், தொடர்ந்து 28 மணி நேரம் பயணித்து 26-ந்தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அதன் பிறகு அதனுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட டிராகன் விண்கலத்தில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர். அங்கு அவர்கள் 18 நாட்கள் தங்கி இருந்து 60 ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர். அவற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 7 சோதனைகள் அடங்கும். இந்தநிலையில், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர். விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 22 மணி நேரத்திற்கு பிறகு இன்று மதியம் 2.55 மணிக்கு வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது. இதனையடுத்து இந்திய நேரப்படி இன்று பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது. இதன்மூலம் சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

விண்கலம் தரையிறங்கியதும், ஸ்பேஸ்எக்ஸின் மீட்பு கப்பல் விண்கலத்தை அடைந்து, விண்கலத்தில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்து சென்றனர். 4 பேரும் வாண்டன்பெர்க் விண்வெளி படைதளத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்கள் மறுவாழ்வை தொடங்குவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லாவின் இந்த பயணம் இந்தியாவின் விண்வெளி பயணத்திற்கு ஒரு பெருமையான தருணமாகும்.

இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இஸ்ரோவை சேர்ந்தவர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com