எல்விஎம்-3 திட்டம் வெற்றி: இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பு - பிரதமர் மோடி

விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களை பொறுத்தி விண்ணில் ஏவி வருகிறது. இந்தநிலையில், அதிக எடை கொண்ட அதாவது 6 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முறையாக இஸ்ரோ விண்ணில் செலுத்தப்பட்டு சாதனை படைத்துள்ளது.
ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டப்படி துல்லியாக நிலை நிறுத்தப்பட்டது என இஸ்ரோ தெரிவித்தது. இந்தநிலையில்,
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ்தளத்தில் வெளியிட்ட பதிவில்,
இந்திய விண்வெளித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோளான அமெரிக்காவின் 'புளூபேர்ட்' LVM3-M6 ராக்கெட் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
வணிக ரீதியில் ராக்கெட்டுகளை ஏவுவதில், உலக சந்தையில் முக்கிய இடத்தை இந்தியா பிடித்துள்ளது. வளர்ச்சி அடைந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பாகும். நமது கடின உழைப்பாளிகளான விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் இஸ்ரோ ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள். விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்திய இளைஞர்களால் இயக்கப்படும் நமது விண்வெளித் திட்டம் மிகவும் மேம்பட்டதாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாறி வருகிறது. எல்.வி.எம்., 3 ராக்கெட் செயல்திறனை வெளிப்படுத்துவது வாயிலாக, ககன்யான் போன்ற எதிர்காலப் பணிகளுக்கான அடித்தளங்களை வலுப்படுத்துகிறோம். வணிக ஏவுதள சேவைகளை விரிவுபடுத்துகிறோம். இந்த அதிகரித்த திறனும் தன்னம்பிக்கைக்கான ஊக்கமும் வரும் தலைமுறைகளுக்கு அற்புதமானது.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.






