சிராளகொப்பாவில் திடீர் நிலநடுக்கம்; மக்கள் வீட்டை விட்டு ஓட்டம்

சிராளகொப்பாவில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.01 ஆக பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
சிராளகொப்பாவில் திடீர் நிலநடுக்கம்; மக்கள் வீட்டை விட்டு ஓட்டம்
Published on

சிவமொக்கா;

திடீர் நிலநடுக்கம்

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிராளாகொப்பாவில் நேற்று அதிகாலை 3.55 மணி அளவில் திடீரென்று நில அதிர்வு ஏற்பட்டது. சிராளகொப்பா நகரில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. வீடுகளும் லேசாக குலுங்கின. இதனால் வீட்டுக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.

மேலும் பெரிய அளவில் சத்தம் கேட்டதாகவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் சிகாரிப்புரா தாசில்தார் கவிராஜ் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். மேலும் அதிகாரிகளும் சென்று ஆய்வு செய்தனர்.

மக்கள் பீதி

இதுகுறித்து தாசில்தார் கவிராஜ் கூறுகையில், இது நிலஅதிர்வா அல்லது வேறு எதுவும் வெடிசத்தமா என்பது தெரியவில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.01 ஆக பதிவாகி உள்ளது. எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. இதனால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்றார்.

சிராளகொப்பாவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந்தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு தற்போது தான் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com