ஆந்திர பிரதேசத்தில் 25 பேருக்கு திடீர் வாந்தி; சுகாதார மந்திரி ஆறுதல்

ஆந்திர பிரதேசத்தில் வாந்தி, குமட்டல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 25 பேரை சுகாதார மந்திரி பார்வையிட்டு ஆறுதல் வழங்கினார்.
ஆந்திர பிரதேசத்தில் 25 பேருக்கு திடீர் வாந்தி; சுகாதார மந்திரி ஆறுதல்
Published on

மேற்கு கோதாவரி,

ஆந்திர பிரதேசத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் எலுரு நகரில் ஒரே பகுதியில் வசித்து வரும் 25 பேருக்கு திடீரென வாந்தி, குமட்டல் ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 18 பேர் குழந்தைகள். மற்ற 7 பேரும் பெரியவர்கள்.

அவர்கள் அனைவரும் உடனடியாக எலுரு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த பாதிப்புக்கான சரியான காரணம் தெரியவரவில்லை.

அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி அறிய மருத்துவர்களும் முயன்றுள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் நோயாளிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர். ஒரு சிறுமி சிறப்பு சிகிச்சைக்காக விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

இதேபோன்று நோயாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து அவர்கள் வசிக்கும் பகுதிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் மருத்துவர்கள் சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

ஆந்திர பிரதேச சுகாதார மந்திரி அல்லா காளிகிருஷ்ணா ஸ்ரீனிவாஸ் சம்பவம் பற்றி அறிந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை பார்வையிட்டார். அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com