10 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி

கடந்த மார்ச் மாதம் முதல் சர்க்கரை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
10 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் சர்க்கரை இருப்பு குறைந்து. உள்நாட்டு சந்தையில் விலை உயர்ந்து வருவதால், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுங்கவரி இல்லாமல்...

நாட்டில் வருகிற பண்டிகை காலத்தில் சர்க்கரையின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த 2025-26 சர்க்கரை பருவத்தில் உற்பத்தியை விட நுகர்வு அதிகமாக இருந்ததால், ஆலைகளில் சர்க்கரை இருப்பு குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்க்கரை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மராட்டியத்தில் சர்க்கரையின் ஆலை விலை குவிண்டாலுக்கு ரூ.5,400 முதல் ரூ.5,560 வரை உயர்ந்துள்ளது. உள்நாட்டு விலையை கட்டுப்படுத்தும் வகையில், சுமார் 10 லட்சம் டன் சர்க்கரையை சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் மேலும் 5 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதில் சுமார் 8 லட்சம் டன் சர்க்கரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பு

இதற்கிடையே, சர்க்கரை உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலையில், நுகர்வு அதிகரித்ததால் உள்நாட்டில் இருப்பு குறைந்துள்ளது. 2025-26 பருவத்தில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி, எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கரும்பின் அளவைக் கணக்கில் கொண்ட பிறகு. சுமார் 2 கோடியே 79 லட்சம் டன்னாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் தொடக்க இருப்பு மற்றும் நடப்பு ஆண்டு உற்பத்தியை சேர்த்து மொத்தம் சுமார் 3 கோடியே 26 லட்சம் டன் சர்க்கரை கிடைத்துள்ளது.

இதில் உள்நாட்டு நுகர்வு சுமார் 2 கோடியே 80 லட்சம் டன் னாக இருக்கும் நிலையில், ஏற்றுமதியையும் கணக்கில் கொண்டால் சர்க்கரை இருப்பு மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா கடைசியாக 2016-17 சர்க்கரை பருவத்தில் சர்க்கரையை இறக்குமதி செய்ய அனுமதி அளித்தது.

இறக்குமதிக்கு அனுமதி

இந்த நிலையில், அக்டோபர் 31-ம் தேதி வரை 10 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் சர்க்கரை விலை அதிகரித்துள்ளதாக் உள்ளூர் சந்தைகளில் சர்க்கரையின் விலை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா கச்சா சர்க்கரையை வெளிநாடுகளில் இருந்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், 10 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டாலும், உள்நாட்டு சந்தையில் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்று தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.500 வரை மட்டுமே விலை குறையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com