

மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினமும் அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவ உபகரணங்கள், சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நோயாளிகளின் உயிரை காக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஆங்காங்கே உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. இதையடுத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள தாராசிவ் சர்க்கரை கூட்டுறவு ஆலை ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. இந்த நிறுவனம் எத்தனால் திட்டத்தை ஆக்சிஜன் ஆலையாக மாற்றியுள்ளது. இதன்மூலம் தினசரி 96 சதவீத தூய்மையுடன் 6 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். இதனை நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, மராட்டிய மாநிலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி திறன் ஒரு நாளைக்கு 1,200 மெட்ரிக் டன்னாக உள்ளது. தேவை 1,700 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. தினமும் 3 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்தால் நாம் தன்னிறைவை பெற முடியும். மாநகராட்சிகள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்கின்றன. சர்க்கரை கூட்டுறவு ஆலைகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.