சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.எம்.ஜோசப் பணிமூப்பு குறைப்பு? மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியான கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்குமாறு கொலிஜியம் அமைப்பு கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி அந்த பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.எம்.ஜோசப் பணிமூப்பு குறைப்பு? மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியான கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்குமாறு கொலிஜியம் அமைப்பு கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி அந்த பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

இதனால் நீதித்துறைக்கும், அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், கே.எம்.ஜோசப் பெயரை கடந்த மே மாதம் மீண்டும் கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்தது. அத்துடன் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வினீத் சரண் ஆகியோரின் பெயரையும் கொலிஜியம் பரிந்துரைத்தது.

கொலிஜியம் அமைப்பு மீண்டும் பரிந்துரைத்ததால் கே.எம்.ஜோசப் நியமனத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அத்துடன் இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகியோரின் நியமனத்துக்கும் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து 3 பேரும் நாளை (செவ்வாய்க்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.

இந்த 3 நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில் இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகியோருக்கு பிறகே கே.எம்.ஜோசப் பெயர் இடம்பெற்று உள்ளது. இதன் மூலம் அவரது பணிமூப்பை மத்திய அரசு குறைத்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

நீதிபதி கே.எம்.ஜோசப் பெயரை கடந்த ஜனவரி மாதமே பரிந்துரைத்த நிலையில், அவரது பெயர்தான் முதலில் இடம்பெற்று இருக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதி ஒருவர், இது தொடர்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்து பேச இருப்பதாக தெரிவித்தார்.

இதன் மூலம் நீதிபதி கே.எம்.ஜோசப் விவகாரத்தில் அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையிலான மோதல் தொடர்வதாகவே நீதித்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com