தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #SupremeCourt
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
Published on

புதுடெல்லி,

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர அனுமதிக்குமாறு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி இந்த நோட்டீசை வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தது. காங்கிரஸ் எம்.பி.க்களான பிரதாப் சிங் பஜ்வா, அமீ ஹர்ஷத்ரே யாஜ்னிக் ஆகியோர் சார்பில், கட்சியின் மூத்த தலைவரும் பதவிநீக்க நோட்டீசில் கையெழுத்து போட்ட எம்.பி.க்களில் ஒருவருமான கபில்சிபல் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com