

தேசத்துரோக சட்டப்பிரிவு
வக்கீல்கள் ஆதித்யாரஞ்சன், வருணதாகூர், வி.இளஞ்செழியன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தேசத்துரோக சட்டப்பிரிவை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:-
நீக்க வேண்டும்
நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124ஏ வகை செய்கிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், ஜவகர்லால் நேரு உள்ளிட்டோரை அடக்குவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த சட்டப்பிரிவு ஜனநாயக இந்திய அரசியல் சாசனத்தில் தொடர்வதை ஏன் அனுமதிக்க வேண்டும்.
பெண்கள், குழந்தைகள, மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் மீதும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதிகார வரம்பு மீறலை உருவாக்கும் இந்த கொடிய சட்டப்பிரிவை நீக்க வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தள்ளுபடி
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் அனுப் ஜார்ஜ் சவுத்ரி ஆஜரானார்.
அப்போது தலைமை நீதிபதி, இந்த மனுவை தாக்கல் செய்ததற்கான சரியான நோக்கம் இல்லாததால், வழக்கை விசாரிக்க வேண்டிய முகாந்திரம் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறினார்.