தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி ஏற்க தடை கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி ஏற்க தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் வருகிற 8-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் வருகிற 9-ந்தேதி பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

இதற்கிடையே சந்திரசூட் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க தடை விதிக்க கோரி முர்சலின் அசிஜித் சேக் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'நீதிபதி சந்திரசூட் பிறப்பித்த சில உத்தரவுகள் முரண்பாடுகளை கொண்டுள்ளன, எனவே, அவர் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஆனந்த் முன்வைத்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'தவறான புரிதல் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு என்பதால் விசாரணைக்கு ஏற்க முடியாது, எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com