குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் டீஸ்டா செடல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது.
Published on

புதுடெல்லி,

கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை அகமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

2002ம் ஆண்டு குஜராத் கலவர வழக்குகளில் அப்பாவி மக்களைக் கைது செய்ய போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறி முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் டீஸ்தா சீதல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் ஜூன் 25-ம் தேதி கைது செய்தனர்.

இதனிடையே, டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி கண்டனம் தெரிவித்தது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி அவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவில்லை.

இதனையடுத்து டீஸ்டா செடல்வாட் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனு மீது பதிலளிக்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. இன்று இந்த வழக்கின் விசரணை மீண்டும் நடைபெற்றது.

2002 குஜராத் கலவர வழக்குகளில் அப்பாவி மக்கள் மீது பொய்யான ஆவணங்களை தயாரித்ததாக அவர் கைது செய்யப்பட்ட வழக்கில், ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டுக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கை இடைக்கால ஜாமீன் நிலைப்பாட்டில் இருந்து தான் பரிசீலிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும், குஜராத் ஐகோர்ட்டு டீஸ்டா செடல்வாட்டின் ஜாமீன் மனுவை சுயாதீனமாகவும், இந்த நீதிமன்றத்தின் எந்த அவதானிப்புகளாலும் பாதிக்காமல் தீர்மானிக்கலாம்.

மேலும், நிலுவையில் உள்ள விசாரணையில் டீஸ்டா செடல்வாட் முழு ஒத்துழைப்பை வழங்குவார், மேலும் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார் என்றும் கோர்ட்டு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com