

புதுடெல்லி,
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்டு 5-ம் தேதியில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த ஆண்டு ஓய்வு பெறுவதால் இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும் வரும் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் அவகாசம் தர வேண்டும் என ஒரு இந்து அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, நம்மிடம் நேரம் மிக குறைவாக உள்ளது. எங்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்கள் என்றார்.
பிற தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டி இருப்பதால் இந்து அமைப்பினர் தங்கள் தரப்பு வாதங்களை விரைந்து முடிக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.
இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின்போது, அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டி இருப்பதால், இதுவரை வார நாட்களில், திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெற்று வந்த வழக்கு விசாரணை தேவைப்பட்டால் சனிக்கிழமைகளிலும் நடத்தப்படலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.