

புதுடெல்லி,
இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டன. இதனால் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர். தற்போது ஓரளவு நிலைமை சீரடைந்து உள்ளது.
இந்நிலையில் இண்டிகோ விமானங்களை ரத்து செய்ததால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணத்தை திரும்ப கொடுப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என கோரி நரேந்திர மிஸ்ரா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மல்யா பக்சி, விபுல் எம்.பாம்ச்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று நடைபெற்றது.
விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறுகையில், இதேபோன்ற பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு ஏற்கனவே விசாரித்து வருகிறது. எனவே மனுதாரர் டெல்லி ஐகோர்ட்டை நாடலாம். அங்கு குறைகள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுக அவருக்கு சுதந்திரம் அளிக்கிறோம் என கூறி அவரது மனுவை விசாரிக்க மறுத்து விட்டனர்.