

புதுடெல்லி
கர்நாடகா சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவும், சட்டபேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிப்பரப்பு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக போபையா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை தொடங்கியது.
போபையா நியமனத்திற்கு எதிராக வாதிட கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ராம்ஜெத் மலானி உச்சநீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.
அப்போது, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போபையா, எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை அவர் நடத்தக்கூடாது. போபையா மூத்த உறுப்பினர் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அவரது கடந்த கால செயல்பாடுகளும் சர்ச்சைக்கு உள்ளானவையாக உள்ளன.
கர்நாடக தற்காலிக சபாநாயகர் போதிய அனுபவம் இல்லாதவர், போபையாவுக்கு எதிராக உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது என்று வாதிட்டனர்.
மூத்த எம்.எல்.ஏக்கள் நிறையபேர் இருக்கும்போது ஆளுநர் ஏன் போபையாவை நியமித்தார்? என்று நீதிபதி பாப்டே கேள்வி எழுப்பினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க சம்மதமா? என காங்கிரஸ் கட்சிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், போப்பையாவை தற்காலிக சபாநாயகராகர் பதவியில் இருந்து நீக்க உத்தரவிடுமாறு கேட்ட காங்.,கின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும், போப்பையாவை நீக்க உத்தரவிட முடியாது. போப்பையா தான் சபாநாயகராக இருந்து ஓட்டெடுப்பை நடத்துவார். குறிப்பிட்ட நபரை சபாநாயகராக நியமிக்க பரிந்துரைக்க கோர்ட்டிற்கு அதிகாரம் கிடையாது. ஓட்டெடுப்பை ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். ஓட்டெடுப்பை வீடியோ பதிவும் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.