பார் கவுன்சில் தேர்தலில் மாற்றுத்திறனாளி வக்கீல்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க சட்ட திருத்தம்: சுப்ரீம் கோர்ட்டு

மாநில பார் கவுன்சில் தேர்தல்களில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
பார் கவுன்சில் தேர்தலில் மாற்றுத்திறனாளி வக்கீல்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க சட்ட திருத்தம்: சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

மாநில பார் கவுன்சில் தேர்தலில் மாற்றுத்திறனாளி வக்கீல்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என வக்கீல் பங்கஜ் சின்கா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, தற்போதுள்ள சட்டவிதிகள்படி பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்க எந்த வாய்ப்பும் இல்லை என இந்திய பார் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மாநில பார் கவுன்சில்களின் பல்வேறு குழுக்களில் பொருத்தமான மாற்றங்களை செய்வதன் மூலம் மாற்றுத்திறனாளி வக்கீல்களின் பிரநிதித்துவத்தை உறுதி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், அனைத்துப் பிரிவினருக்கும் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படும் வகையில், சட்ட விதிகளை திருத்தும் செயல்முறையை இந்திய பார் கவுன்சில் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டனர். முன்னதாக, வரவிருக்கும் மாநில பார் கவுன்சில் தேர்தல்களில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com