ரூ.1337 கோடி அபராதம் விதிப்பு: கூகுள் நிறுவன மேல்முறையீட்டு மனு 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

ரூ.1337 கோடி அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில் கூகுள் நிறுவன மேல்முறையீட்டு மனுவை 16-ந் தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய தொழில் போட்டி ஆணையத்தால் ரூ.1337 கோடி அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில் கூகுள் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை வருகிற 16-ந் தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டுள்ளது.

பல்வேறு சந்தைகளில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தொடர்பான வர்த்தகத்தில் நேர்மையற்ற வழியில் செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. அதற்கு எதிராக கூகுள் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கடந்த 4-ந் தேதி விசாரித்தது.

கூகுள் நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி உள்ளிட்டோர் ஆஜராகி, ரூ.1337.76 கோடி அபராதம் விதிக்கப்பட்டது வழக்கத்தை மீறிய ஒன்று என்றும், இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.

மத்திய அரசின் வாதத்தை கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாது என மறுத்த தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கூகுள் நிறுவனத்தின் மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் இடைக்கால உத்தரவு தொடர்பாக அபராத தொகையில் 10 சதவீதத்தை பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தவும் கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 19-ந் தேதிக்கு தள்ளிவைத்தது. இந்த விவகாரம் தொடர்பான இறுதி விசாரணை ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக கூகுள் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வக்கீல் அபிஷேக் சிங்வி முறையிட்டார்.

அந்த முறையீட்டை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, கூகுள் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு வருகிற 16-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com