அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள்: சுப்ரீம்கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம்கோர்ட்டு அடுத்த வாரம் விசாரிக்க உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. 17 வயது முதல் 23 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியபோதும், இந்த திட்டத்தை வாபஸ் பெற முடியாது என மத்திய அரசு அறிவித்தது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆள் எடுக்கும் பணிகளை விமானப்படை கடந்த மாதமே தொடங்கியது. இதில் கடந்த 30ந்தேதி வரை 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடற்படை மற்றும் ராணுவத்துக்கும் ஆள்சேர்க்கும் பணிகள் கடந்த 1ஆம் தேதி தொடங்கி விட்டது. இந்த சூழலில் மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் போராட்டம் கலவரமாகவும் மாறி உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் அனைத்து வழக்குகளும் அடுத்த வாரத்தில் உரிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. இதன்படி நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால பெஞ்ச், கோடை விடுமுறைக்குப் பிறகு சுப்ரீம்கோர்ட் மீண்டும் திறக்கப்பட்டவுடன் மனுக்கள் அடுத்த வாரம் பொருத்தமான அமர்வு முன் பட்டியலிடப்படும் என்று தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com