

லக்னோ,
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது மாநில முதல்-மந்திரியாக இருந்தவர் கல்யாண் சிங். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மீது மசூதி இடிப்பு தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இவர் ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு இருந்ததால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. தற்போது அவர் கவர்னர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதால் அவரை 27-ந்தேதி (நேற்று) கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு சி.பி.ஐ.க்கு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று அவர் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் தனக்கு ஜாமீன் கேட்டு அவர் மனுத்தாக்கல் செய்தார். அவர் சரணடைந்ததை முன்னிட்டு கோர்ட்டு வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முன்னதாக கவர்னர் பதவிக்காலத்தை நிறைவு செய்த கல்யாண் சிங், கடந்த 9-ந்தேதி மீண்டும் பா.ஜனதாவில் இணைந்ததுடன், தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.