காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: அரசியல் தலைவரின் பாதுகாப்பு அதிகாரி வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி பறிப்பு

காஷ்மீரில் அரசியல் கட்சி தலைவரின் பாதுகாப்பு அதிகாரி வீட்டுக்குள் நுழைந்த சில பயங்கரவாதிகள் அவரது துப்பாக்கியை பறித்துச் சென்றனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: அரசியல் தலைவரின் பாதுகாப்பு அதிகாரி வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி பறிப்பு
Published on

ஜம்மு,

காஷ்மீரில் அரசியல் கட்சி தலைவரின் பாதுகாப்பு அதிகாரி வீட்டுக்குள் நுழைந்த சில பயங்கரவாதிகள் அவரது ஏ.கே.47 துப்பாக்கியை பறித்துச் சென்றனர். இதையொட்டி அந்த நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது ஓரளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டா லும், 40-வது நாளாக இன்னும் பள்ளிகள், கடைகள் திறக்கப்படவில்லை. போக்குவரத்தும் முடங்கி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை.

இந்தநிலையில் அங்கு ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை பயங்கரவாதிகள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் ஜனநாயக கட்சியின் கிஸ்த்வார் மாவட்ட தலைவராக ஷேக் நசீர் என்பவர் உள்ளார். இவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி கிஸ்த்வார் நகரில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்குள் சிலர் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் பாதுகாப்பு அதிகாரியை மிரட்டி அவரது ஏ.கே.47 துப்பாக்கியை பறித்துக் கொண்டனர். சிறிது நேரத்திலேயே அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

அவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் மத்திய, மாநில போலீசார், ராணுவத்தினர் அந்த பகுதியில் குவிந்தனர். துப்பாக்கி பறித்துச் சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த நகரில் மட்டும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது கிஸ்த்வார் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இரண்டாவது சம்பவமாகும். ஏற்கனவே கடந்த மார்ச் 8-ந் தேதி ஷகீதி என்ற பகுதியில் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி திலீப்குமார் என்பவரின் ஏ.கே.47 துப்பாக்கியை முகமூடி அணிந்த மர்மநபர்கள் பறித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்தே நவ்கட்டா ஜாமியா மசூதி உள்பட மாநிலத்தில் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள பெரிய மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதிப்பதில்லை. பெரிய அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் திடீர் போராட்டம் உருவாகிவிடுமோ என்ற அச்சம் காரணமாகவே இதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர்.

ஸ்ரீநகர் ஹஸ்ரத்பால் பகுதியில் 5 போலீஸ் நிலைய எல்லைக்குள் சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com