சுவாதி மாலிவால் விவகாரம்: கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவாலின் உதவியாளர் டெல்லி ஐகோர்ட்டில் மனு

தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து பிபவ் குமார் டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சுவாதி மாலிவால் விவகாரம்: கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவாலின் உதவியாளர் டெல்லி ஐகோர்ட்டில் மனு
Published on

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால். இவர் கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக டெல்லி போலீசில் சுவாதி மாலிவால் அளித்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை 8 முறை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை கடந்த 18-ந்தேதி டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் பிபவ் குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சுஷீல் அனுஜ் தியாகி கடந்த 27-ந்தேதி விசாரித்தார். அப்போது, புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்ற சமயத்தில் பிபவ் குமார் முதல்-மந்திரி இல்லத்தில் இல்லை என்றும், சுவாதி மாலிவால் கூறியிருப்பது உண்மையில்லை என்றும் பிபவ் குமாரின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்கு சுவாதி மாலிவால் தரப்பில், பிபவ் குமாருக்கு ஜாமீன் வழங்கினால் சுவாதி மாலிவாலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என வாதிடப்பட்டது. இதையடுத்து கூடுதல் அமர்வு நீதிமன்றம், பிபவ் குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து பிபவ் குமார் டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தன் மீதான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், தனது உரிய நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இந்த மனு டெல்லி ஐகோர்ட்டில் நாளை மறுநாள்(31-ந்தேதி) விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com