

கருத்தரங்கு
பிரதமர் நரேந்திர மோடி, மழைநீர் சேகரிப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டம் தொடர்பான கருத்தரங்கு நேற்று காணொலிக்காட்சி மூலமாக நடந்தது.கருத்தரங்கிற்கு கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமை தாங்கினார். இதில் புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி மற்றும் பல்வேறு பல்கலைக்கழக துணை வேந்தர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கருத்தரங்கில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
மழைநீர் சேகரிப்பு
பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு, நீர் ஆதாரமாக இருக்கிறது. ஆனால் முறையற்ற நீர் பயன்பாடு, நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் மறு செறியூட்டி நிலத்தடிநீர் வளத்தை பெருக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை.தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ஒரே வழி மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது தான். மழை காலங்களில் பெருமளவில் மழை பெய்கிறது. இதில் அதிகபடியான தண்ணீர் பயன்படாமலேயே கடலில் கலந்து வீணாகிறது.மழைநீரை நாம் முறையாக
சேகரிக்கவில்லை என்றால் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்
மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் அனைத்து பிரிவினரும் இணைந்து செயல்படுவோம். மாணவர்கள் இதில் முக்கிய பங்காற்ற வேண்டும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் நம்முடைய வீடுகளில், அடுக்கு மாடிகளின் மேற்பகுதிகளில், அலுவலகங்களில், வயல்வெளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவதுதான். இது பற்றி பல்கலைக்கழக துணை வேந்தவர்கள் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.