

புதுடெல்லி,
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரம் வரை உள்ள மதுபான கடைகளை மூடவேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்து 321 கடைகள் மூடப்பட்டன. இந்தநிலையில் சத்தீஷ்கார் அரசு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் வழியாக செல்லும் மாநில சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக பெயர் மாற்றம் செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இவ்வாறு சாலைகளின் பெயர்களை வகை மாற்றம் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து தமிழகத்திலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றும் வகையில் அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வக்கீல் பாலு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற தடை விதித்தது.
இந்தநிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக திறந்து அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து வக்கீல் பாலு சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரின் சுற்றறிக்கை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது என்றும், எனவே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரின் உத்தரவை ரத்து செய்துவிட்டு புதிதாக திறக்கப்பட்டுள்ள 1,700 மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் சில விளக்கம் கேட்டு தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும். அந்த விளக்கங்களை பெற்று அதன் அடிப்படையில் மதுபான கடைகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், சுப்ரீம் கோர்ட்டில் உரிய விளக்கம் பெறும்வரை தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் புதிதாக மதுபான கடைகள் திறக்கப்படாது என்றும் உத்தரவாதம் அளித்தார்.
இந்தநிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜராகி, மாநில நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் செயல்படுவது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் மீது விளக்கம் கோரி கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசின் சார்பில் இடைக்கால மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு வழக்கின் மீதான விசாரணை வரும் 20-ந் தேதியன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற இருப்பதால் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் விளக்கம் கோரும் மனுவை அவசர மனுவாக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.