

பெங்களூரு,
மத்திய கனரக தொழில்கள் துறை மந்திரி குமாரசாமி மண்டியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-மேகதாது திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு இப்போதுதான் எதிர்ப்பு தெரிவிக்கிறதா? என்றால் இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக இந்த பிரச்சினை இருக்கிறது. சில ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு அதிக தண்ணீர் வழங்கியுள்ளோம். அணைகள் நிரம்பாத நிலையில் தண்ணீர் திறக்குமாறு தமிழ்நாடு கேட்கக்கூடாது. உண்மையான நிலைமையை தமிழ் நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் அண்ணன்-தம்பிகளை போல் இருக்க வேண்டும். கர்நாடகத்தின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் முன்பு மத்தியில் இருந்த அரசுகள் தோல்வி அடைந்தன. நமது மாநில மக்களின் பணத்தில் அணைகளை கட்டியுள்ளோம். தேவேகவுடா பிரதமராகும் வரை அணைகள் கட்ட மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. நமது அணைகள் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்கும் அணைகளாக மாறிவிட்டன.
தேவேகவுடா தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். மேகதாது திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கத்தில் மேகதாது அணை கட்டப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.