

புதுடெல்லி,
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதியுடன் ஓய்வு பெற்றார். ஆனால் அவரை மேலும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு பணி நீட்டிப்பு வழங்கியது.
இந்த பணி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28-ந் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓய்வுபெற்ற ஊழியரை நியமிக்கும் அதிகாரம் கோர்ட்டுக்கு உண்டா? என்பது பற்றி முதலில் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் எதிர்மனுதாரர்கள் டிராபிக் ராமசாமி, யானை ராஜேந்திரன் ஆகியோர் தமிழக அரசின் மனுவின் மீது பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
இதனை தொடர்ந்து யானை ராஜேந்திரன் தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிராபிக் ராமசாமி தரப்பில் நேற்று அவருடைய வக்கீல் ஜி.எஸ்.மணி பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு வரும் 19-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.