பொருளாதாரம் வலுவடையும் போது வரிச்சுமை மேலும் குறையும்: பிரதமர் மோடி பேச்சு

ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்கள் தொடரும் என பிரதமர் மோடி பேசினார்.
லக்னோ,
உத்தரப் பிரதேசத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது;
“2017 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியதன் மூலம் அரசாங்கம் மறைமுக வரி முறையில் சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. இது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். அதைத் தொடர்ந்து தற்போது மேலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
"நாங்கள் இத்துடன் நிற்கப் போவதில்லை... பொருளாதாரம் மேலும் வலுவடையும் போது, மக்கள் மீதான வரிச்சுமை தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கும்... நாட்டு மக்களின் ஆசீர்வாதத்துடன், ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்கள் தொடரும். ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வருமான வரி இல்லை. ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்த முயற்சிகள் மக்களின் கைகளில் அதிக சேமிப்பை ஏற்படுத்தும்.
நாடு ஒரு துடிப்பான பாதுகாப்புத் துறையை உருவாக்கி வருகிறது. ரஷியாவுடன் இணைந்து உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் ஏகே-203 துப்பாக்கிகளின் உற்பத்தி விரைவில் தொடங்கும். இந்தியா தன்னிறைவு பெற வேண்டும். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். உலகளாவிய அரசியல் இடையூறுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது.”
இவ்வாறு பிரதமர் பேசினார்.






