

புதுடெல்லி,
இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) சார்பில் கடத்தல் மற்றும் கள்ள வர்த்தகத்துக்கு எதிரான இயக்கம் தொடர்பான மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர், 'கடத்தலும், கள்ள வர்த்தகமும் பொருளாதா ரத்தை தாங்கி நிற்கும் நம்பிக்கையை சிதைக்கின்றன. போலி உள்ளீடுகள் விவசாய உற்பத்தி திறனையும், உணவு பாதுகாப்பு முயற்சிகளையும் சீர்குலைக்கின்றன. எனவே சட்டவிரோத வர்த்தகத்துக்கு எதிராக உலகளாவிய கூட்டு நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தினார்.
மாநாட்டில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் விவேக் சதுர்வேதியும் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், 2024-2025-ம் நிதி ஆண்டில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டறிந்து, அவை தொடர்பாக 3,000 வழக்குகளை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.