துப்பாக்கியுடன் இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

தங்க நகைகள் அணிந்தபடி கையில் துப்பாக்கிகளுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
Published on

பெங்களூரு,

பெங்களூரு கொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 28). இவர் தனது இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அண்மை காலங்களில் தங்க நகைகள் அணிந்து கொண்டு, அருகில் 2 பேரை துப்பாக்கியுடன் நிற்க வைத்தும் வீடியோக்களை எடுத்து வெளியிட்டார். குறிப்பாக அவர் பொது இடங்களில் ஏ.கே. 47 ரக துப்பாக்கியை கையில் ஏந்தியவர்களுடன் நடந்து செல்வது போன்று வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இதனால் பொதுஅமைதிக்கு அவர் இடையூறு ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. அந்த புகார்கள் அடிப்படையில் கொத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ரீல்ஸ் மோகத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்களுடன் நடந்து செல்வது போல் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரிந்தது.

மேலும் அவர்கள் கையில் இருப்பது போலி துப்பாக்கிகள் என்பதும் தெரிந்தது. எனினும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவிட்டதாக கூறி அருணை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவரை பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com