டெல்லியில் நடந்ததுபோல் பயங்கரம் மும்பையில் இளம்பெண் கொடூரமாக கற்பழிப்பு

டெல்லியில் நடந்த பயங்கர சம்பவத்தைப்போல, மும்பையில் இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் நடந்ததுபோல் பயங்கரம் மும்பையில் இளம்பெண் கொடூரமாக கற்பழிப்பு
Published on

மும்பை,

மும்பை புறநகர் அந்தேரியில் சகி நாகா என்ற பகுதி உள்ளது. அங்கு நேற்று அதிகாலை ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார்.

அவருக்கு 30 வயது இருக்கும். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். அப்பெண்ணை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அந்த பெண்ணை சிலர் கூட்டாக சேர்ந்து கற்பழித்துள்ளனர். அதன்பிறகு அவரை கொடூரமாக தாக்கி உள்ளனர். அவரது உடல் உறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஒருவர் கைது

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் கூறினர்.

சம்பவத்தை கேள்விப்பட்டு, உயர் போலீஸ் அதிகாரிகள், சகி நாகா போலீஸ் நிலையத்துக்கு விரைந்தனர். பூர்வாங்க விசாரணையை எப்படி நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

டெம்போவில் ரத்தக்கறை

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டெம்போ வாகனத்தில் இந்த கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது. அந்த வாகனத்துக்குள் ரத்தக்கறைகள் படிந்திருந்தன.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மோகன் சவுகான் (வயது 45) ஆகும். பெண் சித்ரவதை செய்யப்படுவதை பார்த்து, யாரோ ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதைக்கேட்டு போலீசார் சென்றபோதுதான், இந்த திடுக்கிடும் சம்பவம் தெரிய வந்தது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஒருவர், 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். அவரை அக்கும்பல் கொடூரமாக தாக்கியது. இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதே பாணியில் நடந்த மும்பை கற்பழிப்பு, மீண்டும் தேசத்தை உலுக்கி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com