சிஆர்பிஎப் முகாம் தாக்குதலுக்கு முன்னதாக ஜிகாத்தை பாராட்டி ‘மைனர்’ பயங்கரவாதி வீடியோ!

காஷ்மீரில் சிஆர்பிஎப் முகாம் தாக்குதலில் பலியான 16 வயது ஜெய்ஷ் பயங்கரவாதி ஸ்ரீநகர் போலீசாரின் மகன் என தெரியவந்து உள்ளது.
சிஆர்பிஎப் முகாம் தாக்குதலுக்கு முன்னதாக ஜிகாத்தை பாராட்டி ‘மைனர்’ பயங்கரவாதி வீடியோ!
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் உள்ள சிஆர்பிஎப் முகாமில் மாநிலத்தில் பயங்கரவாதிகளை எப்படி வேட்டையாடுவது மற்றும் பயங்கரவாதிகள் உடனான சண்டையை எப்படி எதிர்க்கொள்வது என்பது தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இந்த முகாமில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுத்தனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூரமான தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் சண்டையிட்டு மோதலை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மூவரையும் பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றது. புத்தாண்டு கொண்டாடப்பட இருந்த நிலையில் இந்திய ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகள் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து உள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவனான 16-வயது சிறுவன் பர்தீன் அகமது காண்டே ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் கான்ஸ்டபிள் குலாம் முகமது காண்டேயின் மகன் என தெரியவந்து உள்ளது. 10-ம் வகுப்பு படித்துவந்த அகமது காண்டே மூன்று மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து உள்ளான். காஷ்மீரில் 2016 ஜூலை 8-ல் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதை அடுத்து அமைதியின்மை வெடித்தது, வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனையடுத்து பயங்கரவாத இயக்கங்களில் இளைஞர்கள் அதிகமான அளவும் சேரும் ஆபத்து நிலவுகிறது என பாதுகாப்பு முகமைகள் எச்சரிக்கையை விடுத்தது.

2017-ம் ஆண்டு மட்டும் மாநிலத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான வேட்டையில் 200க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது பயங்கரவாத இயக்கங்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு படைகள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இப்போது 16 வயது சிறுவன் பயங்கரவாதியாகி அங்கு தாக்குதலை முன்னெடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதி சிறுவன் பர்தீன் அகமது காண்டேவும் பர்கான் வானியின் சொந்த கூரான தரால் பகுதியை சேர்ந்தவன் என தெரியவந்து உள்ளது.

சிறார்கள் பயங்கரவாத இயக்கத்தில் இணைவது என்பது மிகவும் ஆபத்திற்குரியது என வல்லூநர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தில் இணைகின்றனர் என்றும் அவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுகின்றனர் என்பதும் தெரியவந்து உள்ளது. பயங்கரவாதிகள் தற்கொலை பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்கின்றனர். உள்ளூர் பயங்கரவாதிகள் 15 ஆண்டுகளுக்கு பின்னர் தற்கொலை பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க தொடங்கி உள்ளனர். காஷ்மீரில் பாதுகாப்பு படை முகாம்கள் தொடர்ச்சியாக பயங்கரவாதிகளின் இலக்காக ஆகிவரும் நிலையில் பாதுகாப்பு தொடர்பான கேள்வியை அதிகரிக்க செய்து உள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான சிஆர்பிஎப் முகாம் ஏற்கனவே பயங்கரவாதிகளின் இலக்கில் இருந்தது. சிஆர்பிஎப் படைக்கு இவ்விவகாரம் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டும், பாதுகாப்பை உறுதிசெய்யவில்லை, என தகவல்கள் தெரிவிப்பதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டு உள்ளது.

சிஆர்பிஎப் முகாமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக மைனர் பயங்கரவாதி பர்தீன் அகமது காண்டே ஜிகாத்தை பாராட்டி வீடியோ எடுத்து உள்ளான். இந்த வீடியோவை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் வெளியிட்டு உள்ளது. அதில் பயங்கரவாதி பர்தீன் அகமது காண்டே, இஸ்லாமியர்கள், குறிப்பாக காஷ்மீரி இளைஞர்கள் இந்தியாவிற்கு எதிரான போரில் கலந்துக் கொள்ள வேண்டும், என அழைப்பு விடுத்து உள்ளான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com