

குர்கான்,
டெல்லி அருகே குர்கானில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த பிரதியுமன் (வயது 7) என்ற சிறுவன் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தான். இது தொடர்பாக அந்த பள்ளியின் பேருந்து நடத்துனர் அசோக் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். சிறுவனை அந்த நடத்துனர் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி கொன்றதாக கூறப்பட்டது.
ஆனால் இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக, அந்த பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவனை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தை நடத்தவும், தேர்வு ஒன்றை ஒத்திவைக்கும் நோக்கிலும் இந்த கொலையை அந்த மாணவன் செய்ததாக கண்டறியப்பட்டு உள்ளது. 16 வயதான அந்த மாணவனிடம் இருந்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
16 வயது பள்ளி மாணவனை கைது செய்த போலீசார், காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த சூழலில், 16 வயது பள்ளி மாணவன் தரப்பில், ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த குர்கான் நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து விட்டது. ஏற்கனவே, 16 வயது மாணவன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு ஒருமுறை நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, 2-வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. #Pradyuman | #Gurgaon