அதிர்ச்சி சம்பவம்: 5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

அதிர்ச்சி சம்பவம்: 5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

சக மாணவன் தற்கொலை செய்த ஒரே வாரத்தில், மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Published on

நகரி,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரின் மியாபூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் விஜய் நாயக் - சின்மயி தம்பதி வசித்து வருகிறது. இவர்களது மகள் ஹன்சிகா (வயது 15). அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் தேர்வு எழுத சென்றபோது பள்ளி நிர்வாகம் இவரை தேர்வு எழுத அனுமதிக்காமல், வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்துடன் வீடு திரும்பிய ஹன்சிகா, தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து குதித்தார். அதில் அவர் தரையில் விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சிறுமி ஏன் இவ்வளவு தீவிரமான முடிவை எடுத்தார் என்பதற்கான தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மியாபூர் போலீசார் ஏதேனும் குடும்பப் பிரச்சினை அல்லது காதல் விவகாரம் அவரது தற்கொலைக்குக் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக ஹன்சிகாவுடன் படித்த 15 வயது மாணவன் கடந்த வாரம் பள்ளியின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகாவும், ஷேக் ரிஸ்வானும் சமூக வலைத்தளத்தில் நட்பாக பழகி வந்ததை தெரிந்து கொண்ட ஒரு ஆசிரியை, இதை பள்ளி முதல்வரிடம் கூறி உள்ளார். பின்னர் சம்பவத்தன்று மாணவனின் தாயாரை அழைத்து பள்ளியில் வைத்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போதே மாணவன் ஷேக் ரிஸ்வான் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து உயிரைவிட்டான். இந்த நிலையில் ஹன்சிகாவும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com