

ஐதராபாத்,
தெலுங்கானாவின் காமாரெட்டி நகரில் கடந்த 2 நாட்களாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. இது வன்முறையாக மாறியது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர்.
இதில் ஆர்ப்பாட்டத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ஒருவரின் வாகனம் நேற்று கவிழ்க்கப்பட்டது. கற்கள் வீசப்பட்டதில் அக்கட்சி தொண்டர்கள் சிலர் காயமடைந்தனர்.
இதன்பின்னர், நடந்த சம்பவத்திற்கு பழி வாங்கும் வகையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. கதிபள்ளி வெங்கட ரமணா ரெட்டியின் முகாம் அலுவலகம் மீது காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தி அடித்து, நொறுக்கினர். பன்ஸ்வாடா பகுதியில் பா.ஜ.க. தொண்டர்களும் கற்களால் வீசி தாக்கப்பட்டனர் என தகவல் தெரிவிக்கின்றது.
இந்த சம்பவங்களில் காயமடைந்த கட்சி தொண்டர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூற தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் என். ராமசந்திர ராவ் திட்டமிட்டு இருந்துள்ளார். இதற்காக காமாரெட்டி நகருக்கு செல்லும் முடிவில் இருந்துள்ளார்.
இதனால், பதற்றம் அதிகரிக்க கூடும் என்ற நோக்கில் தடுப்பு நடவடிக்கையாக நேற்றிரவு அவரை போலீசார் வீட்டு காவலில் வைத்து உள்ளனர். இதனை அவர் தொலைபேசி வழியே நிருபர்களிடம் பேசும்போது தகவலாக தெரிவித்து உள்ளார்.