

ஜதராபாத்,
ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களோடு சேர்த்து ஐந்தாவதாக தெலுங்கானா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ரஷ்டிர சமிதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பா.ஜ.க தனித்து போட்டியிடுகின்றது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது
இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மேடசால் தொகுதியில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய சோனியா காந்தி, தலித்கள், பழங்குடியின மக்கள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் மாணவர்களின் நலன்களை டி.ஆர்.எஸ். அரசு புறக்கணித்துவிட்டது. தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியது காங்கிரஸ்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக ஆட்சி செய்து வருகிறார்.
முதல்மந்திரி சந்திரசேகர் ராவ் தனக்காகவும், தனக்கு வேண்டியவர்களுக்காகவே பணியாற்றுகிறார். புதிதாக உருவாகியுள்ள தெலுங்கானாவை அவர் கைவிட்டுவிட்டார். தெலுங்கானா மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.
முன்பு தெலுங்கானாவிற்கு பயணம் மேற்கொண்ட போது, வளர்ச்சியின் அடையாளமாக திகழ்ந்தது. ஆனால் தற்போதையை ஆட்சியில் தெலுங்கானா இரண்டு அடி பின்னோக்கி சென்றுள்ளது என்று கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா மாநிலத்தில் டி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சி முடிவுக்கு வர உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் டிசம்பர் 7-ந் தேதி தேர்தலும், டிசம்பர் 11-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் அங்கு நடைபெற உள்ளது.