தெலுங்கானா உள்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி: தனியார் மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானா உள்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா உள்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி: தனியார் மருத்துவமனையில் அனுமதி
Published on

ஹைதராபாத்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தெலுங்கானாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானாவின் உள்துறை மந்திரி முகமது அலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனோ வைரஸ் தொற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த முகமது அலி கடந்த ஞாயிறன்று இரவு ஜூப்பிலி ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தசூழலில் அவருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மந்திரிக்கு பாதுகாப்புக்காகச் சென்ற போலீசார், உதவியாளர்கள் ஆகியோரைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று 983 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 14,419 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரேநாளில் 4 பேர் உயிரிழந்தாகவும் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 247 பேர் உயிரிழந்துள்ளனர். 5,172 குணமடைந்துள்ளனர். தற்போது வரை 9000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com