எயிட்ஸ் இருந்ததால் திருமணம் செய்ய மறுத்த காதலி...வீட்டிற்குள் புகுந்து காதலன் செய்த விபரீத செயல்

காதலிக்கும் எயிட்ஸ் நோய் இருந்தால் அவளை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என எண்ணினார்.
எயிட்ஸ் இருந்ததால் திருமணம் செய்ய மறுத்த காதலி...வீட்டிற்குள் புகுந்து காதலன் செய்த விபரீத செயல்
Published on

திருப்பதி,

தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம், போச்சாரம், அன்னோஜிகுடா, ராஜுவ் குரு கல்பா காலனி சேர்ந்தவர் மனோகர் (வயது 25). இவர் தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவரது பெற்றோருக்கு எயிட்ஸ் நோய் இருந்தது. இதனால் அவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மனோகருக்கும் எயிட்ஸ் நோய் உள்ளது.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள உறவினரான இளம்பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மனோகருக்கும், இளம் பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்தநிலையில், மனோகருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. மனோகரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று ரத்தப் பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் மனோகருக்கு - எயிட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இளம் பெண்ணின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர். இளம் பெண்ணும் மனோகருடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

மனோகர் இளம்பெண்ணிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அடிக்கடி வற்புறுத்தினார். அப்போது உனக்கு எயிட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் என்னை ஏன் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாய் என இளம்பெண் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மனோகர் தனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது.

காதலிக்கும் எயிட்ஸ் நோய் இருந்தால் அவளை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். தனக்கே திருமணம் செய்து கொடுப்பார்கள் என எண்ணினார். அதன்படி கடந்த 11-ந் தேதி மருந்து கடைக்கு சென்ற மனோகர் ஊசியை வாங்கினார். அதில் தன்னுடைய ரத்தத்தை ஏற்றினார். இளம் பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது மீண்டும் காதலியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்.

இளம் பெண் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து தன்னிடம் தயாராக வைத்திருந்த ஊசியை எடுத்து வலுகட்டாயமாக இளம் பெண்ணிற்கு செலுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து இளம்பெண் யாரிடமும் தெரிவிக்கவில்லை. மறுநாள் காலை இளம் பெண் ணிற்கு காய்ச்சல் ஏற்பட்டது.

அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு இளம் பெண்ணை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் இளம் பெண்ணை பரிசோதித்த போது ஊசி செலுத்திய இடத்தில் கருப்பாக இருந்தது. இதுகுறித்து இளம் பெண்னிடம் விசாரித்த போது மனோகர் தனக்கு ஊசி செலுத்தியதாக தெரிவித்தார்.

இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மனோகரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். திருமணம் செய்ய மறுத்த காதலிக்கு எயிட்ஸ் ஊசி செலுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com